சென்னை: சென்னை பட்டாளம் பெரம்பூர் பேக்ஸ் சாலையைச் சேர்ந்த சகோதரர்கள் யோகேஷ் ஜெயின் (35), நரேந்தர் ஜெயின் (33) மற்றும் வினோத் ஜெயின் (30). மூவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். யோகேஷ் ஜெயினும், அவரது தாயாரும் சவுகார்பேட்டை பெரியநாயக்கன் தெருவில் நகைக் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் யோகேஷ் ஜெயின் நகை மற்றும் பணத்தை சரி பார்த்தபோது, அதில் ஒரு கிலோ தங்கம் மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த யோகேஷ் ஜெயின், யானைகவுனி குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆய்வாளர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், கடந்த 3ம் தேதி நகைக்கடை சாவியை வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற வினோத் ஜெயின், கடையை திறந்து 1 கிலோ தங்கக் கட்டி, ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டார் என்பது தெரிய வந்தது. மேலும் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆய்வாளர் புஷ்பராஜ் உத்தரவின் பேரில் தனிப்படையை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பெங்களூருவில் ஒரு பெண்ணுடன் காரில் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்த வினோத் ஜெயினை செல்போன் சிக்னலை வைத்து போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ தங்கக் கட்டி, ரூ.1.50 லட்சம் ரொக்கம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கர்நாடக மாநிலம் சிமோகாவைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் வினோத் ஜெயினுக்கு நீண்ட நாளாக தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண்ணுடன் ஊர் சுற்றுவதற்காக குடும்பத்துக்குச் சொந்தமான நகைக் கடையிலேயே வினோத் ஜெயின் கைவரிசை காட்டியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. பிறகு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வினோத் ஜெயினை நேற்று ஆஜர்படுத்திய போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். வினோத் ஜெயின் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் சொந்த கடையில் கைவரிசை காட்டிவிட்டு மாயமாகி, பின்னர் சில வாரங்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
The post சொந்த நகை கடையில் 1 கிலோ தங்கக்கட்டி, ரூ.15 லட்சம் திருடிய வாலிபர் கைது: பெங்களூருவில் திருமணமான பெண்ணுடன் ஜாலி உலா appeared first on Dinakaran.